கந்தர்வகோட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டனர்.
போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுப. உலகநாதன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டத் தலைவர் த. கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சி.மகேந்திரன் போராட்டத்தில் பங்கேற்று, இணையவழிச் சான்றுகள் வழங்க உபகரணங்கள் மற்றும் செலவின தொகையை அரசு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விரிவாகப் பேசினார்.
மேலும், எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிடில் தொடர் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார். போராட்டத்தில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, பொன்னமராவதி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ரெ.கருணாநிதி, குமார், வை.புவனேஷ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் அரங்க. வீரபாண்டியன் நன்றி கூறினார்.