புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் 5 அரசு ஜீப்களுக்கு தீவைத்த வழக்கில் மேலும் ஒருவரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்புக்குள்ளாகி 3 நாள்கள் ஆகியும் அரசு அதிகாரிகள் யாரும் ஆலங்குடி பகுதிக்கு வரவில்லை, நிவாரணப் பொருள்கள் வழங்கவில்லை எனக்கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கொத்தமங்கலத்தில் நவ.18-ஆம் தேதி இரவு போலீஸார், வருவாய்த் துறையினரின் 5 ஜீப்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக கீரமங்கலம் போலீஸார்,கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட கிராமத்தினர் 62 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.இந்நிலையில், வழக்கு தொடர்பாக கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.துரையை(51) கீரமங்கலம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.