அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை புற்றுநோய் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அறந்தாங்கி ரோட்டரி சங்கம், அறந்தாங்கி வட்ட சட்டப் பணிகள் குழு, மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்திய நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் அ. அபுதாலிப் தலைமை வகித்தார்.
அறந்தாங்கி வழக்கறிஞர் சங்கத் தலைவர் லோகநாதன், ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன், துணை ஆளுநர் டிஏஎன்.பீர்சேக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை மாவட்ட சார்பு நீதிபதியும், வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவருமான எம்.அமிர்தவேலு தொடக்கி வைத்துப்பேசியது: புற்றுநோய் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். ஆகவே அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். முருகேவேல், குற்றவியல் நடுவர் சி.கலையரசி ரினா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். அப்பல்லோ சிறப்பு கதிரியக்க புற்றுநோய் மருத்துவர் சதீஸ் சீனிவாசன், மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் ஜெயலீலா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனையை இலவசமாக செய்து சிகிச்சையளித்தனர்.
முகாமில், 205 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாமில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் அ.கராத்தே கண்ணையன், ஆர்.அமரகங்கன், வழக்கறிஞர் சங்க செயலாளர் பிஸ்மில்லா பேகம், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கச் செயலாளர் எஸ். பார்த்திபன் வரவேற்றார். வட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.