பொறியியல் கல்லூரியில் மாணவர் மாநாடு
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் மாணவர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மெளண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, ஐஇடிஇ மாணவர் மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான மாணவர் மாநாடு நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராபின்சன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவி கீதா சந்த் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் முனைவர் சுவர்ன ரவீந்திர பாபு பேசியது:
வருங்காலத்தில் ஐஓடி தொழில்நுட்பமானது மிகவும் பிரபலமாக விளங்கும். மேலும் நிறைய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது என்றார் .
கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி இயக்குநர் ஜெய்சன் பரிசு வழங்கினார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை இறுதியாண்டு மாணவி செல்வப்பிரியா நன்றி கூறினார்.