பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புதுகை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருச்சி காவேரி புத்தக நிலையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கண்காட்சியை சன்மார்க்க சபை துணைத் தலைவர் வி.பழனியப்பன், சபை செயலாளர் மு.விசுவநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் முதல்வர் க.கனகராசு வாழ்த்திப் பேசினார்.
கண்காட்சியில் பொது அறிவு, பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுலா, இலக்கிய இலக்கண களஞ்சிய நூல்கள் மற்றும் பல்துறை ஆராய்ச்சி நூல்கள் இடம் பெற்றிருந்தன. மாணவ, மாணவியர் நூல்களை பார்வையிட்டு வாங்கி பயன் பெற்றனர். தமிழ்த்துறை தலைவர் தெ.திருஞானமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.