ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது திமுகவை எந்த வகையிலும் பாதிக்காது என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை எதிர்ப்பவர்கள் பெண்ணினத்துக்கு எதிரானவர் என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பேசியுள்ளது தவறு. பெண் என்பதால் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கிடையாது. அவர் அப்படி பேசியுள்ளது அவருக்கு பெண்ணியம், பெண் உரிமை குறித்த புரிதல் இல்லாததையே காட்டுகிறது. முரசொலி மாறன் வளரும் நாடுகள் நலனுக்காக போராடி தோகா ஒப்பந்தத்தைப் பெற்றார். அவரையும், ஜெயலலிதாவையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடக்கூடாது. 2 ஜி வழக்கில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் மீது நான் குற்றச்சாட்டு ஏதும் கூறவில்லை. அப்போது, அவர்கள் அமைதியாக இருந்தார்கள் என்பதையே கூறியிருக்கிறேன். அப்போது, அவர்கள் பேசியிருந்தால் வழக்கே இருந்திருக்காது. நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது எந்த விதத்திலும் திமுகவை பாதிக்காது என்றார்.