வீடுபேறு அளிக்கும் நூல் திருவாசகம் என்றார் திருவாடானை அரசு கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மு.பழனியப்பன்.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் திருவருள்பேரவை சார்பில் நடைபெற்ற 24 ஆம் ஆண்டு மகா சிவ ராத்திரி விழாவில் பங்கேற்று "மாசற்ற ஜோதி' எனும் தலைப்பில் அவர் பேசியது:
திருவாசகம் படிக்கத்தொடங்கினாலே பேரின்ப வீட்டிற்கு செல்லத்தொடங்கியுள்ளீர்கள் என்பது பொருளாகும். வீடுபேற்றினை தரும் மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.
அந்த மொழியின் ஞானக்கருவூலம் தான் திருவாசகம். எனவே குழந்தைகளை பக்தி இலக்கியம் படிக்கச் செய்யுங்கள்.
இறைவன் ஒன்றாகவும் பலவாகவும் நின்று அருள் செய்கிறார். அவன் ஜோதி வடிவமானவன். அந்த மாசற்ற ஜோதி கருணைக்கடல் வள்ளலார். அதனால் அருட்பெரும்ஜோதி, தனிப்பெருங்கருணை என்று மாணிக்கவாசகர் வழியில் கடவுளைக் காண்கிறார் என்றார்.
விழாவிற்கு, மருத்துவர் மு. சின்னப்பா தலைமை வகித்தார். திருவருள்பேரவை செயலாளர் அரு.வே. மாணிக்கவேலு வரவேற்றார். ஓய்வுபெற்ற ஆசிரியர் நா.திருநாவுக்கரசு திருவாசகம், சிவபுராண பதிகங்களைப் பாடினார். விழாவில், சிவபுராணம் கூட்டுப்பிராத்தனை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. தொட்டியம்பட்டி முன்னாள் தலைவர் ச. சோலையப்பன், நிர்வாகி சொ.அ.மா. அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், புதுப்பட்டி நகரத்தார் சிவன் கோயில், வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் கோயில், திருக்களம்பூர் கதலீஸ்வரர் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சொக்கநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாதர் சமேத உலகநாயகி அம்மன் கோயில், மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிவன் ராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.