புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டவை இணைந்து நடத்திய பேரணியை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து அறந்தாங்கி தனிவட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவர் அ. இளையராஜா, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கே.வைரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி. கார்த்திகா, அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் எஸ். குணசேகரன் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணி பெரிய கடைவீதி, எம்ஜிஆர் சிலை, கட்டுமாவடி முக்கம், காமராஜர் சிலை மற்றும் பேருந்து நிலையம் வழியாக வந்து டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நிறைவுற்றது.
ஊர்வலத்தில் குழந்தைகளின் உரிமைகள், குழந்தை பராமரிப்பு, மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கோஷங்கள் மாணவிகளால் எழுப்பப்பட்டன. பேரணியின்போது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மாணவிகளிடம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.