புதுக்கோட்டை செல்வா நகரில் உள்ள ரோஸ் பசுமைக்குடில் வளாகத்தில் இயற்கை வேளாண் முறையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நபார்டு வங்கி, ரோஸ் தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து இந்த விழாவை நடத்தின. இதில், வரகு பனியாரம், குதிரைவாலி சாம்பார் சாதம், அவல் தயிர் சாதம், குள்ளக்கரி புளியோதரை, சீரகச்சம்பா பிரியாணி, கேழ்வரகு ரொட்டி, முடக்கத்தான் தோசை, தூதுவளை ரொட்டி, வாழைப்பூ வடை, தூயமல்லி சர்க்கரை பொங்கல், பூங்கர் கொழுக்கட்டை, மாப்பிள்ளைச்சம்பா புட்டு, தூயமல்லி ஓலைபக்கோடா, மாப்பிள்ளைச் சம்பா சீடை, கவுனி அதிரசம், தினை லட்டு, வரகு முறுக்கு, திணை மிக்சர் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் இடம்பெற்றன. விழாவில், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சோமசுந்தரம் பேசியது:
நபார்டு பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 7 வருடங்களாக ரோஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரம்பரிய நெல் ரகங்களையும், சிறுதானியங்களையும் பாதுகாத்து பரவலாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வருடம் மாவட்டம் முழுவதும் 300 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன என்றார்.
கூட்டுறவு வங்கியின் மாவட்ட சார் இணைப்பதிவாளர் மிருனாளினி பேசுகையில், உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். அன்றைக்கு அவர்களின் ஊட்டச்சத்து மிக்க உணவுதான், இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு காரணமாக விளங்குகிறது. மாறிவரும் உணவுப்பழக்கம், பாஸ்ட் புட் கலாசாரம் ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கிறது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது என்றார்.
விழாவில், ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஜி.எஸ்.தனபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.