கந்தர்வகோட்டை பகுதியில் பொங்கல் இலவசப் பொருட்களை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம் பொதுமக்களுக்கு சனிக்கிழமை வழங்கினார்.
கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கும் விழாவுக்கு வட்டாட்சியர் க. பொன்மலர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆர். ரெங்கராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பு. பாண்டியன், ஊராட்சிச் செயலாளர் ஐயா. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பைகளை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம் பொதுமக்களுக்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கும் பொங்கல் இலவசப் பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ். சாத்தார், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடியில்...: ஆலங்குடியில் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் கட்சியின் மாவட்டச்செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில்,300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில், திருவரங்குளம் ஒன்றியச்செயலர் விஜயராஜகுமாரன், மாவட்ட அவைத் தலைவர் மன்மதன், மாவட்ட தொழிற்சங்கத்தலைவர் நேதாஜிசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதியில்...: பொன்னமராவதி ஒன்றிய, நகர தேமுதிக சார்பில் நலிந்தோர்க்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு நகரச்செயலாளர் அ.முகமது ரபீக் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சிஆர்.சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் அ. மோகன், கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ப. முருகேசன், எம். முருகன், நகர துணைச் செயலர் ஆர். செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.