புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி அருகேயுள்ள கூழையன்காட்டைச் சேர்ந்தவர் நாகேஷ்(38). அரசுப் பள்ளி ஆசிரியர்.
இவரது மனைவி நிர்மலா(30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை நிர்மலா வீட்டில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார்.
இதைத் தொடர்ந்து, நிர்மலாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும்,
சாவுக்கு காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலையச் செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஆலங்குடி போலீஸார், நிர்மலாவை தற்கொலைக்கு தூண்டியதாக நாகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.