இலுப்பூர் அலமேல்மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் குடமுழுக்கு நடைபெற்று 48ஆம் நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மஹா சங்கல்பம், விக்னேஷ்வர ஆராதனை, சுதர்சன ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, பால், தேன், இளநீர், தயிர், பன்னீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம், திருமஞ்சனம், வேதபிரபந்த சாற்று முறை நடைபெற்றது.
இதன்பின், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேசப் பெருமாள், அலமேல் மங்கை தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் இலுப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.