கந்தர்வகோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் கைவிடப்பட்டது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் க.பொன்மலர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ரவிச்சந்திரன், தனிஅலுவலர்கள் குணசேகரன், பாலகுரு, ஊராட்சிச் செயலர் எஸ்.அறிவுடைநம்பி, ஏஐடியுசி சங்கத்தைச் சேர்ந்த சங்கர், ஜி.நாகராஜன், உ.அரசப்பன், அம்பிகாபதி, தாமரைச் செல்வன், துப்புரவுப் பணியாளர்கள் சார்பில் நாகம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கையான நிரந்தர வேலை, ஊதிய உயர்வு, சீருடை, கையுறை போன்றவைகள் குறித்து பேசப்பட்டது. கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டதால், செவ்வாய்கிழமை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.