புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டியியல், தகவல் தொலைநுட்பவியல் துறை சார்பில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர்.குணசேகரன், அறங்காவலர் உறுப்பினர்கள் கே.ரெங்கசாமி, அ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் திலகவதி தொடக்கவுரையாற்றினார்.
கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், எழுத்தாளருமான ஸ்ரீராம் கே.வாசுதேவன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியது:
உலகின் வேறு எந்த நாட்டை விடவும் இந்தியாவில் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை உறுதி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள குடிமையியல் போக்குகள் ஒரு குறிப்பிட்ட நிலைமையை உருவாக்கி உள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுக்கின்றனர். அதாவது சீன உள்ளிட்ட நாடுகளில் அவற்றின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய உழைப்புச் சக்தியை தரும் வயதில் உள்ள நபர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உழைப்பைத் தரும் வயதை அடையக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கின்றன. உலக மொத்த மக்கள் தொகையில் இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு இளைஞர்கள் உள்ளனர்.
அவர்களை தொழில்சந்தையில் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்தியாவால் பொருளாதார வளர்ச்சி அடைய முடியும். இந்தியாவில் இளைஞர்களின் அதிகரிப்பு வட, கிழக்கு மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் இவர்களை தொழில்சந்தையில் ஈடுபடுத்த போதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்றார்.
கருத்தரங்கில் தனியார், அரசு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கல்லூரியின் மாணவர் தலைவர் டி. இலக்கியா வரவேற்றார். துறைத் தலைவர் ஆர். விஜய் நன்றி கூறினார்.