அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததால் வெப்பம் குறைந்தது.
அறந்தாங்கி பகுதியில் கடந்த வாரம் வெயில் அதிகரித்து காணப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்த காரணத்தாலும், நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி நிலை காணப்பட்டது. பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் மிகவும் குறைந்த அளவே நீர் அழுத்தம் இல்லாமல் வந்தது. கடந்த இரண்டு நாள்களாக இப்பகுதிகளில் பரவலாக லேசாக மழை பெய்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்த காரணத்தால் நிலம் குளிர்ந்தது; சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கால்வாய்கள் மூலமாக நீர் நிலைகளுக்கு முதல் முறையாக நீர் சென்றது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதேபோல், மழை பெய்தால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனை ஏற்படாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல், அறந்தாங்கி தவிர ஆவுடையார்கோவில் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் விவசாயிகள் கோடை உழவில் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் தற்போதைய மழையை அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.