புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
திருவரங்குளம் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை சார் ஆட்சியர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 511 காளைகள் பரிசோதனைகளுக்கு பின்னர் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 177 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.