புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு வளர்ப்பிற்கு ரூ.19 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மாதாந்திர வங்கியாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து நபார்டு வங்கியின் சார்பில் ஆடு வளர்ப்பு திட்டம் குறித்த கையேட்டினை வெளியிட்டு ஆட்சியர் பேசியது:
கூட்டத்தில் வங்கிகளில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக்கடன், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது. பொதுமக்கள் அளிக்கும் 10 ரூபாய் நாணயங்களை வணிகர்கள் பெற்று கொள்ள வேண்டும்.
நபார்டு வங்கியின் மூலம் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வாழ்வை முன்னேற்றம் அடையச் செய்யவும் கால்நடை வளர்ப்புத் திட்ட கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளும் வகையில் 10 ஆடுகள், 1 கிடா கொண்ட ஒரு அலகு 8490 பேருக்கும், 100 ஆடுகள், 5 கிடா கொண்ட ஒரு அலகு 66 பேருக்கும் என ரூ. 19 கோடி மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள பயனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர். சந்தோஷ்குமார், நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.