புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணிக்கு அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிச் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 420 சத்துணவு சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் குறைந்தபட்ச கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், பழங்குடியினர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அதில், 01.08.2018 அன்று வரை பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே 3 கி.மீ தூரத்திற்குள் இருக்க வேண்டும்.
கல்விச் சான்று, குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், வயது சரிபார்க்க அத்தாட்சி நகல் , பிற தேவைப்படும் சான்றுகளின் நகல்கள் அனைத்தையும் விண்ணப்பத்துடன் தவறாமல் இணைக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் இனச் சுழற்சி முறையில் பூர்த்தி செய்யப்படும்.
காலிப்பணியிடம், இனசுழற்சி விவரங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் இணைத்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் 31.10.2018-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தூரச்சுற்றளவு, இனசுழற்சி முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.