பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் யானா புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது என்றார் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது:
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் யானா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. யானா என்றால் நீங்கள் தனிமைப்பட்டவர்கள் அல்ல என்று பொருள். ஆசிரியர்கள், பெற்றோர், சுற்றத்தார் என பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள்,பெண்கள் நேரடியாக இத்திட்டத்தில் புகார் செய்து ஆலோசனை பெறலாம். அதற்காக புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும். தேசியளவில் குழந்தைகளே தொடர்பு கொண்டு புகார் கூறும் திட்டம் இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. மத்திய அமைச்சகம், பிரதமரின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் முந்தைய காலங்களில் பாலியல் உள்ளிட்ட பிரச்னைகளை அனுபவித்து அதனை வெளிப்படுத்த முடியாமல் தற்போது பெருகி வரும் "மீ டூ' என்ற புகாரே இனிமேல் வராது . இத்திட்டத்தில் குழந்தைகளின் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம். இதனால் வரும் காலங்களில் "மீ டூ' புகார் 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
இதற்கென தனியாக இணையதளம் தொடங்கப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படும். அங்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு முறையான ஆலோசனை வழங்குவர். தேசியளவில் தொடங்கப்பட்டு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
வணிக நோக்கோடு குழந்தைகளைத் தத்தெடுக்கும் நிலை அதிகரித்துள்ளது. வளர்க்கும் நோக்கோடு 20.9 சதவீதம் மட்டுமே குழந்தைகள் தத்தெக்கப்படுகின்றனர் 80.1 சதவீத குழந்தைகள் வியாபார நோக்கோடும் உறுப்புகளை திருடி விற்கும் நோக்கோடும் தத்தெடுக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.