தமிழ்நாடு ஏஐடியுசியின் மீனவர் தொழிலாளர்களின் 5-வது மாநாடு மணமேல்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மீனவத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் டே. முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டுக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பிரதிநிதி வே. காளிமுத்து முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலர் டி.எம். மூர்த்தி சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பொதுமக்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மீன் வளத்திற்கு மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், மீன்பிடித் தடைகால நிவாரணம் 10 ஆயிரமாக வழங்க வேண்டும், 60 வயதான மீனவ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்னையை தேசிய மீனவர் பிரச்னையாக மத்திய அரசு கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாவட்ட மீனவத் தொழிலாளர் சங்க செயலர் பி. சின்னத்தம்பி, விவசாய சங்க மாவட்டச் செயலர் மு. மாதவன், ஒன்றியச் செயலர் நா. காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் அ. பகுரூதின் உள்ளிட்டோர் வாழ்த்தினர். மீனவ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி. சிங்கமுத்து வரவேற்றார்.