புதுகை மாவட்டம், அறந்தாங்கியில் பரபரப்பான சூழ்நிலையில் அறந்தாங்கி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அமமுக கட்சியினரின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் வாங்காமல் சென்றுவிட்டார் எனக்கூறி முன்னாள் சங்கத் தலைவர் சங்கிலி முத்துக்கருப்பையா உள்ளிட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிட்டு நீதிமன்ற உத்தரவுப் படி அனைவரும் மனு தாக்கல் செய்தனர்.
இதில், ஆளுங்கட்சியின் அறந்தாங்கி தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.எம்.பெரியசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கிலி முத்துக்கருப்பையா தலைமையில் அமமுக கட்சியினரும் ஒரு அணியும் போட்டியிட்டதால் காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் அறந்தாங்கி எஸ். தட்சிணாமூர்த்தி, கோட்டைப்படட்டிணம் காமராஜ் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர். தேர்தல் அலுவலர் வினிதா தலைமையில் கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர்கள் 6,915 பேரில் இறந்தவர்கள், கடன் பெற்று திரும்பத் செலுத்தாதவர்கள் தவிர மீதமுள்ள 1,508 பேர் வாக்களித்தனர். இதில் 33 பிற கூட்டுறவு சங்கத் தலைவர்கள், நேரடி வாக்காளர்கள் 1, 475 பேர் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவின்போது இரு அணியினரிடையே வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் எழுந்தபோது, காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம்செய்தனர்.
வாக்குப்பதிவு முடிவுற்றதும், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கூத்தாடிவயல் கூட்டுறவு வங்கியில் போலீசார் காவலுடன் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.