சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விராலிமலை அருகே ராஜாளிப்பட்டி குட்டியபட்டி கிராமத்தில் 70க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு வசிப்பவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் குடிநீரை சேமித்து விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதமாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் நீண்ட தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் சீரான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆணையர் நாகராஜன், சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பெண்களின் முற்றுகையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.