பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் நால்வருக்கு கத்தி குத்து விழுந்தது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேலபேட்டை தெருவில் மகாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மதியம் குடமுருட்டி ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட மேலப்பேட்டை தெருவை சேர்ந்தவர்களுக்கும், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர்கள், மேலப்பேட்டை தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் வீரமணி (32), பிரகாஷ் மகன் பிரவீன்குமார் (17), செந்தில் மகன் அருண்குமார் (16), பாரதி மகன் ஜீவா(எ) சிவனேசன் (20) உள்ளிட்டோரை கத்தியால் குத்தினராம். இதில் காயமடைந்த நால்வரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து பாரதிதாசன் தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (20), அஜீத் (20), சரண் (19), உதயகுமார் (17), மணிகண்டன் (18), பார்த்திபன் (26) உள்ளிட்டோரை கைது செய்தனர்.