மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் 2-ம் கட்டமாக 18-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது:
இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தியும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. போராடிவரும் மக்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவே போராடுகின்றனர்.
விளைநிலங்களை அழித்து வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மாற்று வழிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளலாம்.
இங்கு போராடுவோரை சமூக விரோதிகள் எனக் கூறிய சிலர், சென்னையில் சொகுசாக வாழ்பவர்கள். அவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் தெரியாது. இம்மக்களின் நேர்மையான கோரிக்கைக்கு செவிசாய்த்து திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றார் பாண்டிராஜ்.
போராட்டத்தின்போது பதாகைகளை ஏந்தியும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.