தமிழகத்தில் மூன்று மாதங்களில் அரசியல் சூழல் மாறுபடும் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: மேலூரில் இருந்து விரைவில் தொடங்கி 9 ஊர்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதன் மூலம் நல்ல முடிவுகள் வரும். இப்போது எல்லாருமே எங்களுக்கு ஆதரவானவர்கள்தான். எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவானவர்கள் என்ற பலப்பரீட்சைக்குப் போகவில்லை. சிக்கலில் இருந்து அதிமுகவை விரைவில் மீட்டெடுப்போம். அதற்கான முயற்சியில் ஜனநாயக முறைப்படி பொதுக் கூட்டங்கள் மூலமாக மேற்கொள்ள உள்ளோம். கட்சிப் பதவிக்கு வரமாட்டேன். தொண்டர்களுடன் தொண்டராகத்தான் இருப்பேன். கட்சி நடவடிக்கை என்பது பூஜ்யம்தான். ஆட்சி நடவடிக்கை என்பது நன்றாகத்தான் போகிறது. ஆனால், ஜெயலலிதா மறுத்த சில திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதுதான் எங்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் என்பது தொடங்கி இருக்கிறது. மூன்று மாதங்களில் அரசியல் சூழல் மாறும். அது எந்த மாதிரி மாறும் என்பதை ஊடகங்கள்தான் கணிக்க வேண்டும் என்றார் திவாகரன்.