கும்பகோணத்தை அடுத்த சோழன் மாளிகை ஊராட்சியில் மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏழுமாந்திடல் நரிக்குறவர் மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
சோழன் மாளிகை ஊராட்சியில் சில மாதங்களுக்கு முன் மதுக்கடை திறக்க முயன்றபோது, சோழன் மாளிகை பொதுமக்கள், ஏழுமாந்திடல் நரிக்குறவர்கள் நடத்திய போராட்டத்தால் கடை திறப்பது நிறுத்தப்பட்டது. இதுபோல இரு முறை கடையைத் திறக்க முயன்றபோது, நரிக்குறவர்கள் நடத்திய போராட்டத்தால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை அப்பகுதியில் கடை திறக்கப் போவதையறிந்த ஏழுமாந்திடல் பகுதி நரிக்குறவர்கள், கடை முன்பு கூடி போராட்டம் நடத்தினர். ஆனாலும் கடை திறக்கப்பட்டதால் கடையை மறித்து போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியபோது கடையை மூடும் வரை செல்ல மாட்டோம் என்றனர். இருப்பினும் அந்த மதுக்கடையில் வியாபாரம் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த நரிக்குறவ மக்கள்சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடையைப் பூட்ட சென்றனர்.
அதை போலீஸார்தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த கலால் வட்டாட்சியர் ராமலிங்கம் வந்து பேச்சு வார்தை நடத்தியபோது கடையை திறக்கக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததால் அவர் கடையை மூட உத்தரவிட்டார்.