கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம் கோலாட்டம், கும்மியாட்டம், உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இங்கு கோகுலாஷ்டமி பிரம்மோற்ஸவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ம் தேதி கிருஷ்ண ஜனன நிகழ்ச்சி, மறுநாள் காளீயநர்த்தன நிகழ்ச்சி, குதிரை வாகனப் புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சனிக்கிழமை ( 19-ம் தேதி) வெண்ணெய்த்தாழி உத்ஸவத்தை முன்னிட்டு கோயில் முன்மண்டபத்தில விட்டல்தாஸ் மகராஜ் முன்னிலையில் சிறப்பு பஜனையோடு, அலங்கார பல்லக்கில் சுவாமி வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சேவை சாதித்தார். பின்னர் கோலாட்டம், கும்மியாட்டத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி ஆடினர். சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்றனர்.
அப்போது கோயில் வளாகம் மற்றும் கோசாலைப் பகுதியில் 11 இடங்களில் உயரத்தில் கட்டப்பட்டிருந்த வெண்ணெய்ப் பானைகளை பயபக்தியோடு அடித்து உடைக்கும் உறியடி உற்சவம் நடந்தது. மாலையில் மாப்பிள்ளை அழைப்பு உத்ஸவம் ஐதீக முறைப்படி நடந்தது. இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆக. 20-ம் தேதி காலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருமண வேண்டுதல் செய்வோர் சுவாமி, தாயாருக்கு மாலை சாத்தி பிரசாதம் பெற்றுக் கொள்ள கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.