பாபநாசம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் அருகே உள்ள மேலகபிஸ்தலம் கிரமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (38). இவர், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். செல்வமணி, கடந்த
செவ்வாய்க்கிழமை கும்பகோணத்திலிருந்து திருவையாறுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றார்.
அப்போது, பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவை (32) பேருந்தின் உள்ளே வருமாறு கூறினாராம். இதில்,
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இளங்கோ பேருந்திலிருந்து இறங்கி சென்று விட்டார். இந்நிலையில் அந்த பேருந்து திருவையாறு சென்று விட்டு மீண்டும் கும்பகோணம்
நோக்கி வந்து கொண்டிருந்தது.
கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் வந்தபோது இளங்கோ, அவரது தம்பி பிரசாத் (27), சிவா (27), செந்தில்நாதன் (26) உள்ளிட்டோர் உருட்டுக் கட்டைகளுடன் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர்
செல்வமணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் ரமேஷ், போலீஸார் வழக்குப் பதிந்து, இளங்கோ, பிரசாத்
உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.