ஒரத்தநாடு அருகே நீரவரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாலும், தூர்வாராததாலும் மழைபெய்தும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணதங்குடி மேலையூர், நடுத்தெரு பிள்ளையார் கோயில் அருகே 6 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கடந்த 20 நாள்களாக ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
நல்ல மழை பெய்தும், மழை நீர் குளத்துக்கு வரவில்லை. பாசன வாயக்கால்களை முறையாக தூர்வாராததாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதுமே இதற்கு காரணம் என பொதுமக்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
இதேபோல் இப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குளம், சம்மட்டிக்குட்டை, மூரியர் குட்டை, குயவர்குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களும் முறையாக தூர்வாரப்படவில்லை.
இதனால் போதிய அளவில் மழை பெய்தும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாசனத்துக்கும், கால்நடைகள் பராமரிப்பு, பொது உபயோகத்துக்கு
தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர்.எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.