தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கடந்த புதன்கிழமை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மணல் அள்ளப் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை, பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி மற்றும் போலீஸார் பசுபதிகோவில் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது பசுபதிகோவில் பகுதி குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்த ஒரு லோடு ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து லோடு ஆட்டோவை ஓட்டிவந்த நாடார் தெற்கு தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் சிவகுமார்(21) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர். இதேபோல் மாத்தூர் அருகே அனுமதியின்றி குடமுருட்டி ஆற்றில் இருந்து மணல் அள்ளிவந்த மாத்தூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (38) என்பவரை வழக்கு பதிந்து கைது செய்தனர். மாட்டு வண்டியைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.