கும்பகோணத்தில் நகராட்சி ஆணையரைத் தரக்குறைவாகப் பேசிய முன்னாள் நகர்மன்ற உறுப்பினரைக் கண்டித்து, நகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் நகரில் சாலையில் திரியும் மாடுகளை நகராட்சிப் பணியாளர்கள் பிடித்து பட்டியில் அடைத்து வருகின்றனர். இதில், ஏறத்தாழ 100 மாடுகள் பிடிக்கப்பட்டன. இவற்றில் 85 மாடுகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மீட்டுச் சென்றனர். மீதமுள்ள 15 மாடுகள் நகராட்சி பட்டியில் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பட்டியில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளின் உரிமையாளருக்கு ஆதரவாக, நகராட்சி ஆணையர் உமா மகேசுவரியிடம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆணையரை அவர் தரக்குறைவாகப் பேசி திட்டியதாகக் கூறப்படுகிறது.
எனவே, நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் கிழக்கு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.