தஞ்சாவூர் ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு கொசுப் புழுக்கள் அதிகளவில் இருந்ததால் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ரூ. 500 அபராதம் விதித்தார்.
தஞ்சாவூர் பனகல் கட்டடத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை டெங்கு ஒழிப்பு தொடர்பாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இக்கட்டட வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்த ஆட்சியர், குப்பைகளை ஜன்னல் வழியாகப் போடாமல் தொட்டியில் போடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அதே வளாகத்தில் உள்ள ஒன்றிய அலுவலகத்தின் மொட்டை மாடியில் ஆய்வு செய்த ஆட்சியர், பயனற்ற கழிப்பறையில் மழைநீர் தேங்கி அதிகளவில் கொசுப்புழுக்கள் உருவாகி இருப்பது தெரியவந்தது.
எனவே, ஒன்றிய அலுவலகத்துக்கு ஆட்சியர் ரூ. 500 அபராதம் விதித்தார்.
ஆய்வின்போது கோட்டாட்சியர் சி. சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.