தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரைவில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 1981 ஆம் ஆண்டு செப். 15-ம் தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழாய்வுகள் என தமிழ் தொடர்புடைய அனைத்து நிலைகளையும் புதிய அறிவியல் கண்ணோட்டங்களுடன் ஆராய்வதற்காக இப்பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவருக்குச் சிலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து துணைவேந்தர் க. பாஸ்கரன் மேலும் தெரிவித்தது: சிலை அமைக்கும் பொருட்டு, வெண்கலத்தில் இரண்டரை அடி உயரத்தில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலை தயாராகி வருகிறது. இச்சிலையின் மதிப்பு ரூ. 2.50 லட்சம். பல்கலை. நிர்வாகக் கட்டட நுழைவுவாயில் உள்ளே இடதுபுறத்தில் இச்சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக 5 அடி உயரத்துக்குப் பீடம் அமைக்கப்பட உள்ளது. இச்சிலை திறப்பு விழா ஜனவரி முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.