பந்தநல்லூர் கோயில் சிலைகள் மாயமான வழக்கு: கைது செய்யப்பட்டவர்களுக்கு டிச. 21 வரை காவல் நீட்டிப்பு
பந்தநல்லூர் கோயிலில் சிலைகள் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு டிச. 21-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் கீழமணக்குடி விசுவநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வாணை உள்ளிட்ட 6 ஐம்பொன் சிலைகள் மாயமானதாக 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது தெரியவந்தது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் செயல் அலுவலர் ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தர் ராஜாவை நவம்பர் 10 ஆம் தேதியும், இணை ஆணையர் கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர் காமராஜை நவம்பர் 30-ம் தேதியும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் கஜேந்திரன், காமராஜ் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். இருவரையும் டிசம்பர் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல, திருச்சி சிறையில் உள்ள ராமச்சந்திரன், ராஜா ஆகிய இருவரிடமும் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி விசாரித்து, இவ்வழக்கையும் டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தொடர்ந்து அருப்புக்கோட்டையில் கோயில் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர்பாட்சாவையும் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி விசாரித்து, அந்த வழக்கையும் டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.