பாபநாசம் வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சரபோஜிராஜபுரம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் கே.இ.பி.முகம்மது அலி தலைமை வகித்தார். நிர்வாகிகள் முகம்மது மஸ்தான், அப்துல் ரவூப், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஷாஜஹான் வரவேற்றார். விழாவில் கும்பகோணம் சரக கூட்டுறவு கடன் சங்கங்களின் துணை பதிவாளர் இரா.மாரீஸ்வரன், சார்-பதிவாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இப்பள்ளியில் கடந்த 2016-17 ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி பேசினர்.இதில், சங்கச் செயலாளர் டி.கலியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.ஜெய்சங்கர் மற்றும் பள்ளிஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிடோர் பங்கேற்றனர்.