ஒக்கி புயல் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல், குமரி மாவட்டத்தை சுக்குநூறாக்கியுள்ளது. இந்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்கள், இன்னமும் வீடு வந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர்.
எனவே, ஒக்கி புயல் பாதிப்பை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். காணாமல் போனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரியக்கத்தின் நகரச் செயலர் லெ. ராமசாமி தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன், மாவட்டச் செயலர் நா. வைகறை, தலைமைச் செயற் குழு உறுப்பினர் பழ. ராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலர் தென்னவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.