தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகமும், மலேசிய தமிழ் மணிமன்றமும் இணைந்து கல்வி, பண்பாடு உள்ளிட்டவை தொடர்பாக செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், மலேசிய தமிழ் மன்றத் தேசியத் தலைவர் டத்தோ சு.வை. லிங்கம் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தெரிவித்தது:
தமிழர்களின் கல்வி, பண்பாட்டுத் துறைகளின் விழுமியங்களை அயலக நாடுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடர்ந்து பரப்பி வருகிறது. இதன் அடிப்படையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் மலேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தமிழமைப்பான மலேசிய மணிமன்றத்துடன் இணைந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழ் நாட்டுப்புறக் கலைகளை மலேசிய மண்ணில் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளை வருங்காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்லும் விதமாக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மலேசியாவிலிருந்து ஆசிரியர்கள் - மாணவர்கள் பயன்பெறும் விதமாக ஆண்டுதோறும் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்படும் என்றார் துணைவேந்தர்.
இதையடுத்து, சு.வை. லிங்கம் தெரிவித்தது:
மலேசியாவில் இருந்து இனிமேல் தமிழகத்துக்குச் சுற்றுப்பயணம் மட்டுமல்லாமல், கல்விப் பயணம் உருவாகவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. அதற்குத் தமிழ்நாட்டின் தாய்ப் பல்கலைக்கழகமான தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதரவு அளித்துள்ளது என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகப் புல முதன்மையர்கள் ந. அதியமான், இரா. முரளிதரன், துறைத் தலைவர்கள் பா. ஜெயக்குமார், குறிஞ்சிவேந்தன், பேராசிரியர் பழனிவேலு, மலேசிய மணிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.