கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற தாராசுரம் தெய்வநாயகி உடனுறை ஐராவதீஸ்வரர் கோயில் சரபேஸ்வரருக்கு வரும் ஜன. 29-ம் தேதி லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.
எமனுக்கு ஏற்பட்ட மேகநோயை தீர்த்தவரும், தேவலோக யானை ஐராவதத்திற்கு சாப விமோசனம் அளித்த மூர்த்தியாக இத்தலத்து இறைவி, இறைவன் திகழ்கின்றனர். சிறப்புபெற்ற இத்தலத்தில் சங்கடங்களைத் தீர்க்கும் சரபேஸ்வரர், குருபகவான் தட்சிணாமூர்த்தியாகவே காட்சி தருகிறார். குபேரவாழ்வு தரும் குபேர லிங்கேஸ்வரரும், பதினாறு பேறுகளை அளிக்கும் ஆஷாட துர்க்கையும், சனிபகவான் தனித்து நின்று பக்தர்களுக்கு பொங்கு சனியாகவும் காட்சியளிக்கின்றனர். தற்போது, உலக மக்கள் நலன் வேண்டியும், மும்மாரி மழைவேண்டியும் சரபேஸ்வரருக்கு வரும் 29-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ், செயல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் மாதவன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.