கும்பகோணம் மேலக்காவேரியில் அருள்பாலித்து வரும் பிரஹன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பிரம்மா நிறுவிய லிங்கம்தான் பிரம்மபுரீஸ்வரர். அவர் ஏற்படுத்திய தடாகம்தான் பிரம்ம தீர்த்தம். இது பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் தீர்த்தம் ஆகும். இங்கு தல விருட்சம் வில்வ மரம்.
இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகத்தை முன்னிட்டு கோயில் மற்றும் திருக்குளம் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் கடந்த 29-01-2016-ல் நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஜன. 17-ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் தொடங்கியது. நவக்கிர ஹோமம் மற்றும் 1008 சங்கு பூஜை நடைபெற்றது. இரவு முதல் காலம் பூஜை,மகா தீபாரதனை நடைபெற்றது.
ஜன.18-ம் தேதி காலை பஞ்ச அஸ்ரயாகம் நடைபெற்று 2-ம் காலம் பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் அசோக்குமார், ஆய்வர் வீ.மதியழகன் ஆகியோர் செய்திருந்தனர்.