தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை புகார் செய்தனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி பகுதி மக்கள் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் வந்து அளித்த மனு: நடுக்காவேரி பிரதான சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடை மக்களுக்குப் பல வகைகளிலும் இடையூறாக இருந்தது. எனவே, அக்கடை நடுக்காவேரி நடுப்படுகைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அரசின் அனுமதியுடன் அந்த இடத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்த இடத்தில் கடை அமைவதால் யாருக்கும் எவ்வித சிரமமும் இல்லை. சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு வீடுகளே இல்லை. ஆனால் சிலரது தூண்டுதல் காரணமாக இந்தக் கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. எனவே, கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் மதுக்கடை அமைக்க வேண்டும். மேலும், சிலர் புதுச்சேரியில் இருந்து போலி மதுபானங்களைக் கொண்டு வந்தும் விற்பனை செய்கின்றனர். எனவே நடுக்காவேரியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மதுக்கடையை அகற்றக் கோரி...
செங்கிப்பட்டி பகுதி மக்கள் அளித்த மனுவில், செங்கிப்பட்டி கந்தர்வகோட்டை சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்படவுள்ளது. இப்பகுதியில் வண்ணியம்பட்டி கிராமத்துக்கு பெண்கள் நடந்து செல்லும் வழி. அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசுப் பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளன. எனவே இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
வீட்டு மனை கோரி...
ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு அய்யனார்புரம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு:
அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களது முன்னோர்களுக்கு அரசால் 3 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் வீட்டுமனை பட்டா இல்லாமல்தான் வசித்து வருகிறோம். இந்தக் காலகட்டத்தில் வீட்டுமனை பட்டா அவசியம் தேவைப்படுகிறது. எனவே, வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.