புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் இசை, நாட்டியப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
இப்பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுக் கல்வித் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சங்க இலக்கிய அறங்கள் என்ற தலைப்பில் இலங்கை மாணவர்களுக்கான 10 நாள் பயிலரங்கத் தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, மோரீஷியஸ் நாட்டுத் தமிழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணைப் பிறப்பிக்கப்பட்டு, ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி இப்பல்கலைக்கழகத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது.
இதேபோல, சட்டப்பேரவையில் ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது, புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு இசை, நாட்டியப் பயிற்சி தமிழ் பல்கலைக்கழகம் மூலம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் ரூ. 20 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்கிறது.
மேலும், மலேசியத் தமிழ் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மியான்மர், தென் ஆப்பிரிக்கா தமிழர்களுக்கும் பயிற்சி அளிப்பது குறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது என்றார் துணைவேந்தர்.