பேராவூரணி அருகே தனியார் பேருந்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த நடத்துநர் மற்றும் 3 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.
பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கறம்பக்காடு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது, படியில் நின்ற நடத்துனர் பார்த்திபன் (25), பேராவூரணி அரசு கல்லூரி மாணவி ஓவியா (18), அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செளமியா (16) திவ்யா (16) ஆகியோர் படியிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.
நடத்துநர் பார்த்திபன், மாணவி செளமியா ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்ற இரு மாணவிகளும் பேராவூரணி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.