பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராவூரணி ஒன்றிய நகர விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் வி. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் டி.பழனியப்பன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட நாள்களை 200 நாள்களாகவும், கூலியை ரூ. 400 ஆக உயர்த்தியும் வழங்க வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேராவூரணி பெரிய குளத்தில் கழிவுகளையும், கழிவுநீரையும் கொட்டும் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தவுடன் உடனடியாக வழங்க வேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். பேராவூரணி நகரத்தின் வழியாக செல்லும் ஆனந்தவள்ளி வாய்க்கால் ஆற்றை சுத்தப்படுத்தி தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கருப்பையா, பெத்தையன், கோவிந்தராசு, சுந்தர்ராசு, சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் எம்.சித்திரவேலு நன்றி கூறினார்.