இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர் பாம்பாட்டித் தெருவைச் சேர்ந்தவர் பென்னட் மானுவேல் மகன் வெஸ்லி அருள் (25). ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வந்தார். இவர் 2007 ஆம் ஆண்டு செப். 24-ம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டு, கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப் பதிந்து தஞ்சாவூர் எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஆர். ராஜ்குமார் (50), திருச்சி வரகனேரியைச் சேர்ந்த என். பாரூக் (35) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட விரோதம் காரணமாக வெஸ்லி அருள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆர். சதீஷ்குமார் வாதிட்டார். இந்த வழக்கை நீதிபதி எஸ். கார்த்திகேயன் விசாரித்து, ராஜ்குமார், பாரூக்குக்கு ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தார்.