தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் 12,127 விவசாயிகள் பயனடைந்தனர் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள 1436 ஏரி, குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் மண் எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 722 ஏரி, குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் இதுவரை 9,87,290 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுத்து 12,127 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்ற கனிமங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொள்வதற்கு அந்தந்த வட்டாட்சியர்களே அனுமதி ஆணை வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் மண், சவுடு மண், களி மண் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி ஆணை பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திலும் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், விவசாயப் பயன்பாட்டுக்கு மண் எடுக்க மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக வட்டாட்சியர்களால் ஆணை வழங்கப்படும்.
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக அனுமதி ஆணை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.