தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் டி. தனசேகரன் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி கிராமத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயி சேவியர் வயலில் அமைத்துள்ள இயந்திர நடவிற்கான பாய் நாற்றங்காலையும், முதல்சேரி கிராமத்தில் மானிய விலையில் உளுந்து விதை பெற்று, விதைப்பு செய்துள்ள விவசாயி தேவாசீர்வாதம் செல்லதுரை வயலையும், அதே
கிராமத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களை மானியத்தில் பெற்ற விவசாயிகளின் வயல்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வின்போது, குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் வீரக்குறிச்சி, திட்டக்குடி, புதுக்கோட்டை உள்ளூர், அணைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
இதேபோல், பேராவூரணி வட்டம், புனல்வாசல், அனந்தீஸ்வரபுரம் ஆகிய கிராமங்களில் பாய் நாற்றங்கால் மற்றும் இயந்திர நடவுப் பணிகளையும் இக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கிருஷ்ணகுமார், வேளாண்மை துணை இயக்குநர்கள் என்.நெடுஞ்செழியன், ஜஸ்டின், பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். ஈஸ்வர், வேளாண்மை அலுவலர்கள் ஆர். சாருமதி, எஸ்.மாலதி, எஸ்.சங்கீதா, எஸ்.ராணி, மணிமேகலை ஆகியோர் உடனிருந்தனர்.