தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, அக்கடை முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நடுக்காவேரியில் செயல்பட்டு வந்த மதுபானக் கடை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய போராட்டத்தையடுத்து, 2012 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. இந்நிலையில், 10 நாள்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டது.
இதை மூட வலியுறுத்தி அக்கடை முன் திங்கள்கிழமை நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஏ. ராம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் அருளரசன் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் அன்பழகன், திருவையாறு வட்டாட்சியர் கண்ணன், டாஸ்மாக் உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 20 நாள்களில் கடையை அப்புறப்படுத்துவதாக அலுவலர்கள் தரப்பில் உறுதியளித்தனர். இதையடுத்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.