நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த நபர்கள் தஞ்சாவூரில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திரண்டனர்.
கும்பகோணம் அருகே ஆடுதுறை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் சீட்டுப் பணம், வைப்புத்தொகை என பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்தப் பணத்தை நிறுவனத்தினர் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 30 பேர் செவ்வாய்க்கிழமை திரண்டனர். முதலீடு செய்த தொகையைப் பெற்றுத் தருமாறு போலீஸாரிடம் முறையிட்டனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்ததையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.