தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் மின்னணுமயமாக்கம் செய்யப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியரகத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அ வர் பேசியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் கருவூலத் துறையின் சார்பில் அரசுத் துறை அலுவலர்கள்,
பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் மின்னணுமயமாக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணி தொடங்கி நடைபெறுகிறது.
பணிப்பதிவேடுகள் இல்லாத காரணங்களால் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது பலன்களைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கவே பணிப் பதிவேடுகள் மின்னணு முறையில் பாதுகாக்கப்படுகின்றன.
கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் இப்பணியில் 35 சதம் முடிக்கப்பட்டுள்ளது.
இப்பணியை அரசு அலுவலர்கள் விரைந்து மேற்கொண்டு கருவூலத் துறையுடன் இணைந்து 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாவட்ட கருவூல அலுவலர் என். நடராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.