தஞ்சாவூர் அருகே சுடுகாட்டில் புதன்கிழமை பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் புதன்கிழமை காலை சடலம் எரிந்து கொண்டிருந்தது.
தகவலறிந்த நடுக்காவேரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தலை முதல் வயிறு வரை பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. மேலும், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. எனவே, இவர் வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு, இச்சுடுகாட்டில் எரியூட்டப்பட்டாரா, அல்லது அதே இடத்திலேயே கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டாரா போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.